எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகள்?
எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்கிறது?
இந்த கேள்வியை வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்காத மனிதர் இருப்பாரா என்று தெரியவில்லை.
"நான் என்ன பாவம் செய்தேன்?"
"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?"
"எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள், நான் மட்டும் ஏன் இவ்வளவு போராட வேண்டும்?"
இப்படிப்பட்ட கேள்விகள் ஒரு கட்டத்தில் நம்மில் அனைவருக்கும் வரும்.
நானும் இதே கேள்விகளை பலமுறை கேட்டிருக்கிறேன்.
அதற்கான பதிலைத் தேடி, நம் வாழ்க்கையை ஒரு மூன்றாவது மனிதன் போல சற்று தள்ளி நின்று பார்த்தால், பல நேரங்களில் நம் பிரச்சனைகளில் ஒரு பகுதியை நாமே உருவாக்கியிருப்பதை உணரலாம்.
தவறான முடிவுகள், அவசர ஆசைகள், அதிக எதிர்பார்ப்புகள், வாழ்க்கையை சரியாக கணக்கிடாதது, ஒரே இரவில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் – இவை பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன.
அதே நேரத்தில், சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். சிலர் அதை கர்மா என்பார்கள், சிலர் விதி என்பார்கள், சிலர் வாழ்க்கையின் பாடங்கள் என்பார்கள்.
இறைவன் மனிதனுக்கு ஆறறிவு கொடுத்தது வெறும் சம்பாதிப்பதற்காக மட்டும் அல்ல. சிந்திப்பதற்காகவும்.
ஆனால் நாம் பெரும்பாலும் சிந்திப்பது பணம், வேலை, குடும்பம், எதிர்காலம் பற்றியே.
ஒரு நாள் அமைதியாக அமர்ந்து இந்த கேள்விகளை கேட்டுப் பாருங்கள்
- நான் யார்?
- நான் ஏன் பிறந்தேன்?
- என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
- என் பிறவியின் நோக்கம் என்ன?
இந்த கேள்விகளுக்கான தேடல் தொடங்கும் போது, வாழ்க்கையை பார்க்கும் பார்வையே மாற ஆரம்பிக்கும்.
ஆயிரம் பரிகாரங்கள் செய்யும் முன், இந்த கேள்விகளை நமக்குள் கேட்க ஆரம்பிப்பதே ஒரு பெரிய பரிகாரம்.
வாழ்க்கை புரிதல் பற்றிய கட்டுரைகள் இனி தொடர்ந்து வரும்.
